எனக்கு நினைவு தெரிந்ததிலிருந்து ஈழக் கனவு என்பது என்னோடு பயணித்து வருகிறது.
எனது பள்ளி, கல்லூரி வாழ்நாள்லெல்லாம் கதைத்தலாய், கட்டுரையாய், புகைப்படமாய், குறும்படமாய் என் உள்ளோட்டமாய் வளர்ந்தே வந்துள்ளது.
2006 - ஆடடா களத்தே எனும் என் ஈழக் குறும்படப் பணிகளுக்காக கும்முடிப்பூண்டி, புழல் என ஈழ அகதிகள் முகாம் மக்களை சந்தித்தேன். காலம் கணிந்து வருகிறது. எப்படியும் இன்னும் சில ஆண்டுகள் ஈழ விடுதலை எங்கள் தலைவர் பெற்றுத் தருவார் என்று நம்பி வாழ்ந்தவர்கள் முகங்களின் நம்பிக்கை இன்னும் என் கண்முன் நிழலாடுகிறது.
2009 மே - புதுமாத்தளன் முள்ளி முடிவிற்கு பிறகு இன்றைய அரசியல் நிலைகள் எதிர் திசை நோக்கி நகர்கின்றன. அன்று புலிகளை அழிக்கப் புறப்பட்ட சக்திகள் இன்று ராஜபக்சேவை மறைமுகமாய்க் கைக்காட்டி செய்த பாவத்திற்கு தீர்வு தேடுகிறது.
பாவம் செய்ய தூண்டியவர்களும் உதவியவர்களும் கழுவாய்த் தேட முயற்சிக்கின்றனர்.
காட்சிகள் மாறுகின்றது.. காய்கள் நகர்கின்றன...
ஈழ விடுதலையை எதிர்த்தவர்களே இன்று நேச சக்திகளாக உருமாறுகிறார்கள்...
ஜெ.யை ஹிலாரி சந்திக்கின்றார்...
போர்க் குற்ற விசாரனைத் தவிர்க்க ரணில் அமெரிக்காவிற்கும் லண்டனிற்குமாக அலைகிறார்...
நம்பியார்களும் மேனன்களும் நிருபமாவை ராஜபக்சேவின் விருந்திற்கு அனுப்புகிறார்கள்...
எப்படியோ... ஒரு தீர்விற்கு வழி தேடப்படுகிறது.
அது காணி, காவல் அதிகாரமில்லா கட்டப்பஞ்சாயத்து ஆகுமா? புரியவில்லை...
ஆனால், எல்லாம் இழந்து சோர்ந்து போன எம் மக்களிடம் துளியும் சக்தியில்லை...
எழுந்திருக்க இயலவில்லை.. நடப்பது நடக்கட்டும் என்று வெறுப்பில் கசந்த கையறு மனநிலை.
ஆயினும், உலக நல் மாந்தம் உன்னிப்பாய் கவனிக்கிறது. ஒப்பாரிகளையும் ஓலங்களையும் கண்டு உலகம் இந்தியாவை சபிக்கிறது. ஐ.நா.வை முடுக்குகிறது.
ஒன்றுக்கு பத்தாய் நாம் விலைக் கொடுத்தும் விடுதலைச் சாத்தியக் கூறு வெகுதொலைவாகக் கூட தெரியவில்லை. காலம் எதையும் கணிய வைக்கும் என்ற நம்பிக்கையுடன் ஒன்றிப்போம்.
தண்ணிர் விட்டொம் வளர்த்தோம் சர்வேசா.. இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருக - திருவுளமோ?